Powered By Blogger

Tuesday 5 January 2016

ALL TRS TN: ஜனவரி 17-ல் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்: தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து வழங்க ஏற்பாடு

ஜனவரி 17-ல் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்: தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து வழங்க ஏற்பாடு
நாடு முழுவதும் முதல் கட்டமாக 17.01.2016 அன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. தமிழ் நாட்டில் 43,051 சொட்டு மருந்து மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இம்முகாம்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட முக்கிய அம்சங்கள் முடிவெடுக்கப்பட்டது.

1. சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.

2. அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் முதல் தவணையாக 17.01.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.

3. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.

4. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

5. சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படுகிறது. இது விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவுகிறது.

6. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் மற்றும் மருத்துவமனைகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

7. இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்,சிறப்பு செயலாளர் டாக்டர் பி.செந்தில்குமார், மருத்துவக்கல்வி இயக்குநர் (பொ) டாக்டர் விமலா, பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமி, இணை இயக்குநர் டாக்டர் சேகர், உலக சுகாதார நிறுவன கண்காணிப்பு மருத்துவர் டாக்டர் என்.எஸ்.சுரேந்திரன், யுனிசெப் சார்பாக டாக்டர் அர்ச்சனா, டாக்டர் ஜெகதீசன் மற்றும் மருத்துவத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து தாய்மார்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment